தேர்தல் வந்துட்டா போதும்.. சின்ராசுகள் டீ குடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்!
தேர்தல் சமயங்களில் சாலையோர டீ கடைகளில் தலைவர்கள் டீ குடிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: அது என்னவோ தெரியலை. என்ன மாயமோ புரியலை. தேர்தல் வந்து விட்டால் போதும். தலைவர்கள் டீ குடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
மக்களை சந்திக்கப் போகும்போதும் சரி, தேர்தல் பிரச்சாரத்தின்போதும் சரி டீ குடிக்கும் தலைவர்களை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதற்கென்ன விசேஷமான காரணம் என்று தெரியவில்லை.
அதைவிட முக்கியமாக, தேர்தலின் போது மட்டும் மக்களிடம் போய் டீ குடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏன் தலைவர்களுக்கு ஏற்படுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து அகில உலக அளவில் ஒரு ஆராய்ச்சியே கூட நடத்தி கண்டுபிடிக்க முயலலாம்.
களை கட்டுகிறது
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் களை கட்டியுள்ளது. எங்கெங்கும் அனல் பறக்கும் பிரச்சாரம். தலைவர்கள், தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வருகின்றனர். இதில்தான் இந்த டீ குடிக்கும் வைபவமும் இடை இடையே புகுந்து களை கட்டியுள்ளது.
எலெக்ஷன் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள்.. கமல் தாக்கு
டீ பிரியரோ?
மு.க.ஸ்டாலின்தான் இந்த டீ குடிக்கும் படலத்தை அதிக பிரபலமாக்கியவர். நமக்கு நாமே பயணத்தின் போதுதான் இவர் டீக்காக டிரஸ் போட்டுக் கொண்டு திடீர் திடீரென சாயா கடைக்குள் புகுந்து கொண்டு சூடான சுவையான டீ சாப்பிட்டு அதை பிரபலமாக்கியவர்.
குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு
ஏன் குடித்தார்?
ஏன் ஸ்டாலின் டீ குடித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் ஒரு டீ பிரியராக இருக்கலாம். அல்லது டீ குடிக்கும் காட்சி மக்களிடையே தீயாக பரவி நம்மைக் கவனிக்கலாம் என்ற எண்ணமாகவும் அது இருக்கலாம். எல்லாம் அந்த (சபரி) ஈஸ்வரனுக்கே வெளிச்சம்!
எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் மட்டுமா டீ குடிப்பார்.. நாங்களும் டம்பளரை ஆத்தி ஆத்தி குடிப்போம்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலக்கினார். அவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக தலைவர்களும் பிரச்சாரத்திற்குப் போன இடத்தில் ஒரு கடையில் புகுந்து டீ சாப்பிட்டு புரட்சி செய்தனர். அதிமுகவில் முக்கியத் தலைவர்கள் யாரும் இப்படி கடைக்குப் போய் டீ சாப்பிட்டதில்லை என்பது சுவாரஸ்யமான ஒரு வரலாற்று செய்தி.!
டீ கடை ஓனர்
இதில் ஓ.பன்னீர் செல்வம் டீ சாப்பிட்டதை தனித்துச் சொல்ல வேண்டும். அவர் இப்போதுதான் துணை முதல்வர், முன்னாள் முதல்வர் எல்லாம். ஆனால் அவர் ஒரு டீ கடை ஓனர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதை அவரே கூட சில முறை பிரச்சாரக் கூட்டத்தில் கூறி மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அக்கா தமிழிசை
இவங்கதான் குடிக்கணுமா.. டீ குடிப்பதில் ஆணாதிக்கம் நிலவுவதா.. நெவர்.. நானும் குடிக்கிறேன் பாருங்க என்று அக்கா தமிழிசை முந்தாநாள் டீ கோப்பையுடன் கிளம்பி விட்டார். ஆமாங்கா ஆமா. தூத்துக்குடியில் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர் தமிழிசை கடைக்குப் போய் டீ சாப்பிட்டு சற்றே இளைப்பாறினார். அத்தோடு விட்டாரா துடைப்பத்தை எடுத்து தெருவையும் பெருக்கி பிரமிக்க வைத்தார். கூடவே காய்கறிகளையும் வாங்கி விட்டு நடையைக் கட்டினார்.
சுடச் சுட டீ.. பார்த்து பார்த்து வாங்கிய உருளைக் கிழங்கு.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை
புத்துணர்ச்சி
எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தத் தலைவர்களுக்கு ஏன் இப்படி தேர்தல் சமயத்தில் மட்டும் டீக்கடைகள் நினைவுக்கு வருகின்றன. அப்போது மட்டும் ஏன் டீ சாப்பிடுகிறார்கள். அதை ஏன் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் போடுகிறார்கள் என்பதுதான் கேள்விக்குரிய ஆச்சரியம். ஒரு வேளை டீ சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக இயங்கலாம் என சொல்ல வருகிறார்களா.. இல்லையெனில், மக்களே பாருங்க நாங்களும் டீ குடிக்கிறோம் என்று கூற விரும்புகிறார்களா.
ரங்கசாமி
ஆனால் இந்த விஷயத்தில் புதுச்சேரி ரங்கசாமியை நாம் பாராட்டியாக வேண்டும். அவர் இப்படியெல்லாம் ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை டீ குடிப்பவர் அல்ல. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு புல்லட்டில் ஏறி உட்கார்ந்து அவ்வப்போது டீ கடைக்குப் போகக் கூடியவர் ரங்கசாமி என்று புதுச்சேரிக்காரர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.
எப்படியோ அரசியல்னா ஒன்னு தீக்குளிக்கிறாங்க.. இல்லாட்டி இப்படி டீ குடிக்கிறாங்க.. மக்களுக்கு இதனால் நல்லது நடந்தால் சரித்தான்.