வளம் பெருகட்டும், மகிழ்ச்சி நிறையட்டும்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீபாவளி வாழ்த்து
தமிழக தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.
சென்னை: தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கொங்கு மக்கள் தேசிய கட்சி:
இதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் மக்களுக்கு வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது: "தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இருக்கின்ற கெட்ட எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணங்களை வளர வைக்கும் நாள்.
நட்பு - உறவு
கணவன் மனைவியாக இருந்தாலும், அப்பா மகனாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் நட்புக்கும் உறவுக்கும் நடுவே ஒருவரை பற்றி ஒருவருக்கு விமர்சனம் செய்யக்கூடிய, ஒத்துப்போகாத கருத்துகளும் இருக்கும். அப்படிப்பட்ட விசயங்களை இந்த நாளில் மனம் திறந்து வெடிக்க செய்துவிட்டு ஒளி படர செய்வதுதான் தீபாவளி.
பொறாமை ஒழியட்டும்
ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளுடன் மனம்விட்டு பேசி தீய எண்ணங்களை களைந்துவிட்டு நல்ல உறவுகளையும், நட்புகளையும் இன்று முதல் மேம்படுத்தி கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இப்படி ஒரு நட்பு ஒளி படர்ந்துவிட்டால் பொறாமை என்ற நம்முடைய பொது பகையாளியை ஒழித்துவிட முடியும்.
இருட்டும் - அழுக்கும்
மனதில் இருக்கும் இருட்டையும், அழுக்கையும் அகற்றிவிட்டு அன்பும், பண்பும், தூய்மையும், நேர்மையும், நாணயமும் கொண்ட ஒரு நல்ல வாழ்வினை நாளை முதல் அனைவரும் வாழ்ந்திட இந்த தித்திக்கும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன். மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடும் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட ஆசைபடுவதோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேராசிரியர் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் அவர் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்மை, உண்மை, மென்மை
ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மை யும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம். இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். இந்த உணர்வில் நம்பிக்கை யுள்ள நல்லவர்கள், இந்திய தேச மக்களை வேற்றுமையில் ஒற்றுமை பேணுகிற மக்களாக வாழ வழிகாட்ட வேண்டும்.
அரசியல், பண்பாடு
உலகளவில் இந்திய ஜனநாயகம் உயர்ந்து நிற்கிறது. இதற்கு காரணம் அண்ணல் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆஸாத் போன்ற பெரும் தேசிய தலைவர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் இதயப்பூர்வமாக ஒருமனப்பட்டு , ஓர்மை உணர்வோடு வாழ்வதற்கான அரசியல் பண்பாட்டை உருவாக்கி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
தேசிய தலைவர்கள்
மத துவேஷம், மத விரோதம், மத குரோதம், மத மறுப்பு, மத வெறுப்பு, மத கிலேசம், மத மாச்சரியம் போன்ற தீமைகளிலிருந்து நாட்டை பாதுக்காக்கக்கூடிய சிறு நெறியை முந்தைய தேசிய தலைவர்கள் காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
நல்லரசாக வெல்வோம்
அந்த நெறிமுறையை ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அவரவர் மதம், அவரவருக்குரியது. அவரவர் செல்லும் வழி, அவரவர் விரும்பும் வழி. இந்திய மக்கள் அனைவரும் செல்லும் பொதுவான வழி இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற வழி. அந்த வழியில் எல்லோரும் செல்வோம், இந்திய திருநாட்டை பொன்கொழிக்கும் நல்லரசாக வெல்வோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.