கஜா புயலை கண்டு கொள்ளாத மோடியுடன் கூட்டணியா?... திருமுருகன் காந்தி காட்டம்
சென்னை: தமிழகத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி வராததால் பாஜகவுடன் தமிழக கட்சிகள் கூட்டணி வைக்கக் கூடாது என மே 17 இயக்கத்தின் ஒருங்ணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில், கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது மக்களை சந்திக்க வராத பிரதமர் மோடி அரசு விழாவை பயன்படுத்தி மதுரையில் பிரசாரத்தில் ஈடுபட வருவதாக கடுமையாக விமர்சித்தார்.
மேலும், பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி மதுரைக்கு வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து திருமுருகன் காந்தி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும் திருமுருகன் காந்தி, இன்று பேசுகையில், தமிழகத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி வராததால். பாஜகவுடன் தமிழக கட்சிகள் கூட்டணி வைக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளை எதிர்த்து மே 17 இயக்கம் பரப்புரை செய்யும் என்றும் திருமுருகன் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.