தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து
சென்னை: இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்ட ரமலான் வாழ்த்து அறிக்கை தனிச்செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன், திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து
கே.எஸ். அழகிரி
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புனிதமான ரமலான் மாதத்தில் உண்ணாமல், நீர் அருந்தாமல், அறநெறிப்படி வாழவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
பசித்திருத்தலின் மூலம் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதற்காக நோன்பிருந்து, பகிர்ந்து கொடுப்பதன் மகிழ்ச்சியை உலகிற்குச் சொல்லும் வகையில் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து, எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் புனித ரமலானைக் கொண்டாடுகிறார்கள். பெருநாள் என்ற மகிழ்வோடு ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமாவளவன் வாழ்த்து
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இசுலாம் கோட்பாட்பாட்டின்படி, மாந்தநேயத்தைப் போற்றும் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இசுலாத்தின் அடிப்படையே மனித நேயம் தான். பிறப்பின் அடிப்படையில் பேதம் பார்க்காமல், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபாடு காட்டாமல் அனைவரும் சமம் என்று கருதுவதே இசுலாமிய அறநெறியாகும்.
ஜவாஹிருல்லா
இஸ்லாம் மார்க்கத்தின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங் கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஈகைத் திருநாளில் உலகமும் நமது நாடும் கொரோனவிலிருந்து விடுபடவும் அது ஏற்படுத்திய தீய விளைவுகள் களைவதற்கும், அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்படவும் இறைவனை பிரார்த்திப்போம்.
வேல்முருகன் வாழ்த்து
ரமலான் நோன்பை மேற்கொண்டு மனிதத்தைப் புனிதமாக்கும் அல்லாவின் (இறைவனின்) வேண்டுகோளை நிறைவேற்றும் இஸ்லாமியப் பெருமக்களைப் போற்றுகிறேன், பாராட்டுகிறேன். இந்த ஆண்டின் ரமலான் பெருநாளைக் கொண்டாடும் என் இனிய சகோதர இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் உளம்கனிந்த ரமலான் நல்வாழ்த்துகள்.