3 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படாத அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உட்பட 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், அதில் 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
ஆனால் இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்தே, இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி ஆகியோர் மூலம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி லோக்சபா தேர்தல், தமிழகத்தில், ஒரே கட்டமாக நடக்கிறது. அப்போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது. அப்போதே, மேற்சொன்ன மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும், நடத்த வேண்டும் என்பது திமுக கோரிக்கை.
இந்த நிலையில் இன்று திமுக சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், அரசியல் காரணங்களுக்காக 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் இந்த மூன்று பகுதிகளுக்கும் மற்ற தொகுதிகளோடு, இடைத்தேர்தல் நடத்தியிருக்கலாம். எனவே இந்த மூன்று பகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்றார்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞரிடம் ஏன் இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இந்த மூன்று சட்டசபை தொகுதிகள் தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்கள் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்று கூறினார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம், இது குறித்து பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். அதேநேரம், உடனடியாக தேர்தல் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்டு அறிந்த பிறகுதான் உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று தெரிவித்து விட்டனர்.