தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் பலி- 4,538 பேருக்கு தொற்று பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இன்று ஒரே நாளில் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை தாண்டியதாக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக 5,000க்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 3,391 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆகும்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ - நலமுடன் வீடு திரும்பினார்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 47,782 ஆகும்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83377 ஆகும்.