கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் 2ஜி டேட்டா கார்டு இலவசமா? பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
சென்னை: கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மட்டும் 2ஜி டேட்டா கார்டு இலவ்சமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த இலவச டேட்டாகார்டு தங்களுக்கு வழங்கப்படவில்லையே என ஆதங்கப்படுகின்றனர் பள்ளிக்கூட மாணவர்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுத்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழி வகுப்புகள், கல்வி டிவி சேனல் மூலம் வகுப்புகள் என அரசு ஒருபக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்லூரி,பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா கார்டு- முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு
இலவச 2ஜி டேட்டா கார்டு
இன்னொரு பக்கம் தேர்வுகள் மற்றும் அரியர்ஸ்கள் ரத்து என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன் உச்சமாக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதல்வர் எட்பபாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
விமர்சனங்களை தவிர்க்க...
கல்லூரி மாணவர்கள் ஓட்டுரிமை பெற்றவர்கள். அவர்கள் ஏற்கனவே விடுமுறை நாயகன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொண்டாடி போஸ்டர்கள் அடித்தவர்கள். இப்போது கல்லூரி மாணவர்களின் ஓட்டுகளை உறுதி செய்யும் வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
முதல்வரின் தடாலடி அறிவிப்பு
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடிய வாக்குறுதியாக மட்டுமே இந்த அறிவிப்பு இடம்பெற்றுவிடும். அதனால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடாலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதிலும் ஓட்டுப் போடும் மாணவர்களுக்குத்தான் கொடுக்கிறார்கள் என விமர்சனம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
சரி கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு பள்ளிக் கூட மாணவர்களாகிய எங்களுக்கு ஏன் தரவில்லை? நாங்களும்தானே இணையவழியில் கல்வி கற்கிறோம்.. இன்னும் சொல்லப் போனால் கிராமப்புற ஏழை பள்ளி மாணவர்களுக்கு இந்த 2ஜிபி டேட்டா கார்டு என்பது பெரும் வரப் பிரசாதமாக இருக்கும் அல்லவா? என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் பள்ளிக்கூட மாணவர்கள். அரசு இதனையும் கவனத்தில் கொள்ளுமா?