தமிழகம்: கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு!
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் இன்று திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற்ற பின்னர் 50 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது.
பகல் நேரங்களில் வெளியே நடமாடுவதே பெரும் துயரத்துக்குரியதாக இருந்தது. பகல் முழுவதும் வீசிய அனல்காற்று, இம்முறை கடுமையாக இருந்தது.
இதனால் பள்ளிக்கூடங்களை திறப்பது தாமதமாகலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-ந் தேதி தமிழக அரசு பள்ளிகளைத் திறக்கும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதையும் மீறி பள்ளி திறப்பது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளால் பெற்றோர்கள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் இன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் இன்றே வழங்கப்பட உள்ளன. இதனிடையே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்தரைகளால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
நடப்பு ஆண்டு முதல் நாடு முழுவதும் தாய்மொழி, ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் கற்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தி திணிப்பை எதிர்த்து ஆவேசக் குரல்களை எழுப்பின. ஏற்கனவே நீட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகளால் மாணவர்களின் எதிர்கால படிப்புகள் கேள்விக்குறியாகி கிடக்கிறது. இந்த நிலையில் தேவையே இல்லாமல் இந்தியை திணித்து படி என சொல்வதா? என்கிற குமுறல்களும் பெற்றோரிடத்தில் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் கருத்துகள் விரும்பாதவரை இந்தியை திணிக்கமாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருப்பதால் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.