உண்ணாவிரதத்தில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் உடல்களை தானமாக தருகிறோம்.. இடைநிலை ஆசிரியர்கள் உருக்கம்
Recommended Video
சென்னை: தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் தங்களின் உடல்கள் தானம் செய்யப்படும் என இடை நிலை ஆசிரியர்களின் பொது செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டி.பி.ஐ வளாகத்தில் 6வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.
இன்று கூட்டத்தில், பேசிய இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ராபர்ட் கூறுகையில்,
ஆறு நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வ௫கிற ஆசிரியர்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு அரசுதான் காரணம். எங்களுடைய உடல் உறுப்புகளை அரசு மருத்துமனைக்கு தானமாக வழங்குவோம்.
முதல்வர் நினைத்தால் இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேற்ற முடியும். ஆனால் அரசு நிறைவேற்ற மறுக்கிறது. இங்கு விசப்பூச்சிகள் அதிக அளவு காணப்படுகிறது. அதுமட்டும் இன்றி அடிப்படை வசதிகள் கூட இங்கு ஏதும் இல்லை. 210 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் இதுவரை அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் 1500 பெண்களின் கண்ணீரை கண்டு உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார். ரத்த தானம் செய்ய சென்ற ஆசிரியர்களை காவல்துறை அதிகாரிகள் மரியாதை குறைவான சொற்களால் பேசியுள்ளனர்.
அரசு தொடர்ந்து எங்களை இழுத்தடிக்காமல் உடனடியாக இந்த ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கைவிடுத்தார்.