புதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன்? அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்
சென்னை: புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை என இல. கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முகங்களில் ஒருவராக இருப்பவர் இல. கணேசன். மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டவர்.
புதுவை ஆளுநராக இல. கணேசன்?
தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன், யாரும் எதிர்பாராத வகையில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாராயணசாமி- கிரண்பேடி மோதல்
புதுவையில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அண்மையில் புதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட கிரண்பேடி உரை இல்லாமல்தான் தொடங்கியது. இந்த நிலையில் கிரண்பேடியை மாற்றிவிட்டு இல. கணேசனை ஆளுநராக மத்திய அரசு நியமிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகின.
ஃபேஸ்புக்கில் இல. கணேசன் விளக்கம்
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த இல. கணேசன், ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப் படுத்தும் எதுவும் அதிகார பூர்வமாக வரவில்லை. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. நன்றி. உறுதியான செய்தி வந்தால் உடனடியாகப் பதிவு செய்கிறேன். என கூறியுள்ளார்.
கடவுளின் கையில் முடிவு- கிரண்பேடி
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இது குறித்து கேட்டபோது, கடவுளின் கையில்தான் முடிவு என்று மட்டும் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு ஆளுநர் பதவி கொடுத்தால் அதுவும் ஒருவகையில் பாஜகவுக்கு ஆதரவான தாக்கத்த ஏற்படுத்தும் என்பது அக்கட்சியினர் கருத்து.