டி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்
சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என். சேஷன்(86 வயது) கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டு காலத்தில் பதவி வகித்தார். நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவர் ஆவார்.
இவர் (திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் ) கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை அடையாறில் நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் காலாமானார்.
தேர்தல் சீர்திருத்தங்கள்.. மிரண்ட அரசியல் ஜாம்பவான்கள்.. '90களில் தெறிக்கவிட்ட சேஷன்
வேதனை அளிக்கிறது
டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டி.என். சேஷன் ஒரு திறமையான நிர்வாக அதிகாரி. அவர் நாட்டிற்காக மிகுந்த அக்கறையுடனும் மற்றும் ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றினார். அவர் நாட்டிற்காக மேற்கொண்ட தேர்தல் சீர்திருத்தங்கள் நம் ஜனநாயகம் வலிமை பெற உதவியது. அத்துடன் ஜனநாயகத்தில் முடிவு எடுப்பதில் பலரும் பங்கேற்கும் வகையிலும் அமைந்தது. அவரது மறைவு வேதனை அளிக்கிறது. ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.
சீர்திருத்த நடவடிக்கை
இதனிடையே டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழ்ந்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனத இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நினைவில் கொள்ளப்படும்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில். "ஜனநாயகத்துக்காக டி.என் சேஷன் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தைரியமானவர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவு கூறப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயக பாதுகாவலர்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில். "முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சுதந்திரமான, நேர்மையான தேர்தலைநடத்தி ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலராக திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.
வருத்தம் அளிக்கிறது
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி என் சேஷன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழக மற்றும் மத்திய அரசு துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.