இந்திய தேர்தல்கள்.. சேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்!
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் காலமானார்
சென்னை: வெளிப்படையான, நேர்மையான தேர்தல்களை இந்தியாவிலும் நடத்த முடியுமா.. ஏன் முடியாது.. 100 சதவீதம் அது முடியும் என்று நிரூபித்து காட்டியவர்தான் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்!
அன்றெல்லாம் வழக்கமான தேர்தல் முறைகள்தான்.. தேர்தல் விதிமுறைகள் குறித்த அதிகாரமும் பொறுப்பும் வெறும் எழுத்தில்தான் இருந்தது.. ஆனால் இவைகளை செயல்படுத்த இந்திய நாடு கிட்டத்தட்ட 40 வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆம்.. 1990, டிசம்பரில் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்புக்கு வந்தார் சேஷன். கடுமையான உழைப்பு.. நேர்மையான அணுகுமுறை... ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர், அமைச்சரவை செயலராக உயர்ந்தார்.. இந்த சமயத்தில்தான் விபிசிங் பிரதமரானார். ராஜீவ் அரசுடன் இருந்தவர் என்பதாலோ என்னவோ, பணியிறக்கம் செய்யப்பட்டு, திட்டக் குழு உறுப்பினர் ஆனார்.. அந்த பொறுப்பையும் சிறப்பாகவே செய்த சேஷனுக்கு 6 வருடங்கள் கழித்துதான் தலைமை தேர்தல் ஆணையர் பதவி கிடைத்தது .. சந்திரசேகர் ஆட்சியில்!
எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!
தனித்துவம்
இந்த பொறுப்புதான் தான் யார் என்ற தனித்துவ அடையாளத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவும், நாட்டு மக்களின் மனங்களில் இடம் பெறவும் சரியாக வழிகோலியது! தேர்தல் சீர்திருத்தங்கள் என்பதை ஒவ்வொன்றாக கையில் எடுத்தார் சேஷன்.
சவுக்கடி
பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படைகளை இறக்கி.. ஒரு சில இடங்களில் வழக்கமாக நிகழ்ந்து கொண்ட அராஜகங்களுக்கு முதல் சவுக்கடி தந்தார். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் வாக்குசாவடிகளின் இயல்பு நிலையை கொண்டு வர சேஷன் அதிகமாகவே மெனக்கெட்டார். இன்னும் ஓபனாக சொல்லப் போனால், ஓட்டுப்போடகூட முடியாமல் தடுக்கப்பட்டு வந்த தலித் மக்கள், சேஷனின் வருகைக்கு பிறகுதான் ஒரு பாதுகாப்பு கவசத்தை உணர்ந்தார்கள்.. பயந்து நடுங்கி கொண்டிருந்த மலைவாழ் மக்களுக்கு புது நம்பிக்கை பிறந்தது.
வெகுஜன மக்கள்
வாக்கு சாவடிகளில் கொலை குற்றங்கள், வன்முறை நிகழ்வுகள் குறைய தொடங்கின.. துணிந்து வந்து சாரைசாரையாக ஜனநாயக கடமையாற்றி விட்டு சென்றார்கள் இதுதான் சேஷன் வெகுஜன மக்களின் மனசிலும் எளிதாக நுழைய காரணமாக இருந்தது.
சீர்திருத்தங்கள்
அதுவரை, தேர்தல் ஆணையர் என்றால், வெறும் தேர்தல் முடிவுகளை இறுதியாக வந்து 2 நிமிடம் அறிவித்துவிட்டு போவார்கள்.. ஆனால், நடத்தை விதிமுறைகளை மிக தீவிரமாக கையில் எடுத்தவர் சேஷன் மட்டுமே.. ஏராளமான தேர்தல் பார்வையாளர்களை நியமனம், பாதுகாப்புக்காக லட்சத்துக்கும் மேற்பட்டோரை நிறுத்துவது, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.. வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்... வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.. இது எல்லாமே சேஷன் வகுத்த பிளான்கள்தான்!
விமர்சனங்கள்
இவ்வளவு கண்டிப்பு மிக்க தேர்தல் ஆணையர் திகழ்கிறார் என்றால், விமர்சனங்களும், கண்டனங்களும் வராமல் இருக்குமா என்ன? எழத்தான் செய்தது.. ஜனதா தளத்துக்கு நெருக்கடி தந்தார் என்றும் சொல்லப்பட்டது.. தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே பத்திரிகைகளில் பேட்டிகளை அடிக்கடி தருகிறார்.. என்றெல்லாம் செய்திகள் அன்றைய காலங்களில் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. ஆனாலும், தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாக தேர்தல் ஆணையம் உருவாக தொடங்கியது.. அரசியல் கட்சிகளும் இதை கண்டு அச்சம் கொள்ளவே செய்தனர். வண்டி வண்டியாக அரசியல் கட்சிகள் ஆட்களை கொண்டு வந்து ஒட்டு போட செய்த கலாச்சாரம் அடியோடு ஒழிந்தது என்பதையும் மறுக்க முடியாது.
தைரியம்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் குரேஷி.. இவர் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். "ஒருமுறை பிகார் சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது என்னைக் கண்காணிப்பாளராக நியமித்தார் சேஷன். அதுவும் பதற்றத்திற்குப் பெயர் பெற்ற லல்லு பிரசாத் போட்டியிடும் தொகுதிக்கு கண்காணிப்பாளராக நியமித்தார். அப்போது ஒரு வார்த்தை சொல்லி அனுப்பினார்.. 'ஒன்னும் பிரச்சனை இருக்காது. உங்க முகத்தில குண்டு வீசுவாங்க. அப்படி இல்லேன்னா வயிற்றில் துப்பாக்கியால் சுடுவாங்க. தவிர பெருசா ஒன்னும் நடக்காது. தைரியமா போயிட்டு வாங்க" என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.. ஆனால் இதன் அர்த்தம், நேர்மை மற்றும் தைரியமுடன் நாங்கள் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக சேஷன் இப்படி உற்சாகமூட்டி அனுப்புவார்" என்றார்.
மறக்க முடியாத சேஷன்
தேர்தல் ஆணையம் என்றால் இவ்வளவு சக்தி படைத்ததா என்பதை புரிய வைத்தவர் சேஷன்.. நடைமுறையில் இன்று தேர்தல் முறையில் நடந்து வரும் மாற்றங்களுக்கு முன்னோடி சேஷன்... எத்தனை தலைமை தேர்தல் ஆணையர்கள் வந்தால் என்ன.. நம் சேஷனை போல வருமா?!