நீட் ஒழிக்கப்படும்வரை... சபரிமாலா டீச்சர் செயலில் சாதித்ததை அரசு, கட்சிகள் கையில் எடுக்கலாமே!
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படும்வரை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்ற தற்போது சபரிமாலா டீச்சர் செயலில் சாதித்ததை அரசும் அரசியல் கட்சிகளும் கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
Recommended Video
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என கனவுக்கு கொள்ளி வைத்தது நீட் நுழைவுத் தேர்வு. வெவ்வேறு பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு அவர்களுக்கு அறிமுகமே இல்லாத ஒரு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள்களை தயாரித்து தேர்வு எழுதி அதில் மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவ படிப்பு என்கிறது நீட் தேர்வு.
இந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக அத்தனைவிதமான போராட்டங்களையும் தமிழகம் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி தொடர்ந்து பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுத்த தோல்வியால், அழுத்தத்தால் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட பேரவலமும் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் நீட் இன்னமும் ஒழிக்கப்படவில்லை.
NEET: ஜீவித்குமாராகவே இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது!
சாதித்த சபரிமாலா டீச்சர்
சரி நீட் ஒழிக்கப்படும்வரை ஆண்டுதோறும் படித்து வெளியேவரும் மாணவர்களின் மருத்துவ கனவை குழிதோண்டி புதைத்து கொண்டேவா இருக்க முடியும்? அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது என நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா டீச்சர் களமிறங்கினார். அரசு பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண் பெற்று உரிய பயிற்சி இருந்தால் தம்மாலும் சாதிக்க முடியும் என வேட்கையுடன் இருக்கும் மாணவர்களை தேடித் தேடி தமிழ் நிலம் முழுவதும் அலைந்தார் சபரிமாலா.
மாணவர்களை தேடினார்
அப்படி சபரிமாலா டீச்சரின் சத்திய பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்தான் தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார். என்னால் உரிய சிலபஸ்- பாடம் இருந்தால் வெல்ல முடியும் என ஜீவித்குமார் காட்டிய உறுதியான மனநிலையை உருவேற்றி உருவேற்றி இன்று புடம்போட்ட வெற்றியாளராக, நீட் தேர்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றவராக திகழ வைத்திருக்கிறார் சபரிமாலா டீச்சர். அந்த ஜீவித்குமாரை சபரிமாலா டீச்சருக்கு அடையாளம் காட்டித் தந்தவர் அவரது ஆசிரியர்தான்.
செயலில் இறங்கி காட்டினார்
பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற முதுமொழியைப் பின்பற்றி நிதிதிரட்டி, பயிற்சி மையம் தேடி ஜீவித்குமாருக்கு உரிய பயிற்சிகள் கொடுத்து தனு ஒரு மனுஷியாய் சாதித்திருக்கிறார் சபரிமாலா டீச்சர். எல்லோரும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம், நீட்டை ஒழிப்போம் என்று பதாகைகளை ஏந்தி பிடித்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி காட்டுவேன் என செயலில் இறங்கி சாதித்தேவிட்டார் சபரிமாலா. நீட் தேர்வு நிச்சயம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் இருவேறு கருத்துக்கே இடமில்லை.
எல்லோரும் செய்ய வேண்டும்
ஆனால் நீட் ஒழிக்கப்படும்வரை என்ன செய்யப் போகிறோம்? இப்படியே போராடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.. கிராமப்புற அரசுப் பள்ளிகளில் வேட்கை கொண்ட அறிவுத்தாகம் தேடும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உரிய- வலிமையான பயிற்சி கிடைக்கச் செய்ய வேண்டியதும் தமிழக அரசின் கடமையாக இருக்கிறது என்பதை சாதனை மனுஷி சபரிமாலா சொல்லிவிட்டு நிமிர்ந்து நிற்கிறார். அரசுதான் செய்ய வேண்டுமா? என்ன அரியலூர் அனிதாவுக்காக உருகும், இரங்கல் தெரிவிக்கும் அத்தனை அத்தனை அரசியல் கட்சிகளும் இதனை ஒரு தவவேள்வி போல செய்தால்தான் என்ன?
முட்டுக்கட்டைகள் உடைக்கப்படும்
நீட் ஒழிக்கப்படும்வரை உங்களுக்கான பதிலடியாக எங்கள் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்... நீட் என்ன எத்தனை கேட்டுகள் போட்டாலும் உடைத்தெறியும் வல்லமை தமிழக மாணவர்களுக்கு உண்டு என்பதை காட்ட நம்மால் முடியும் என்பதைத்தான் வெளிப்படுத்தி நிற்கிறார் சபரிமாலா டீச்சர். ஊர்தோறும் அனிதாக்களையும் ஜீவித்குமார்களையும் அடையாளம் காண்போம்! ஒற்றை அனிதாவுக்காக அழுத கண்ணீர் ஓய்ந்து போகட்டும்! ஓராயிரம் அனிதாக்களை சபரிமாலாக்கள் போன்ற தன்னலமற்ற பேராசான்களை கொண்டு உருவாக்கியே தீருவோம் என்பதே நமது சபதமாக இருக்க வேண்டும்... ஆம் நீட் ஒழிக்கப்பட்டாகும் வரை!