உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தப்படாததால் நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து விட்டதாகவும், அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகளை நியமிக்க மாவட்ட தேர்தல்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது.