செய்ய மாட்டோம்னு சொல்லிகிட்டே தமிழகத்தில் இந்தியை வலிய வலிய திணிக்கும் மத்திய அரசு!
Recommended Video
சென்னை: இந்தி உட்பட எந்த ஒரு மொழியையும் திணிக்கமாட்டோம் என மத்திய அமைச்சர்கள் அறிவித்து வாய் மூடுவதற்குள் ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு முன்னோடி மாநிலம். நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இருந்தே டெல்லி சர்காரின் இந்தி திணிப்பை வலிமையோடு போராடி எதிர்த்து வெற்றி கண்ட நிலம் தமிழர் மண்.
மொழிகாக்கும் போர்களை நடத்தி தங்களது மார்புகளை துப்பாக்கிக் குண்டுகளுக்கு திறந்து காட்டியவர்கள் தமிழர்கள்; தம் தாய்மொழி காக்க தங்களையே தீ நாக்குகள் தின்ன கொடுத்து தியாக மறவர்களானவர்கள் தமிழர்கள். தேசத்தின் விடுதலைக்குப் பின்னரும் இந்த வரலாறை இந்தியா கண்டிருக்கிறது.
தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி
நேரு தந்த வாக்குறுதி
அதனால்தான் வரலாற்று சிறப்புக்குரிய நேரு உறுதி மொழி உருவானது. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை இந்தியை திணிக்கமாட்டோம் என்கிற அந்த நேரு வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு இந்தியை திணிக்க இன்னமும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது.
மும்மொழிக் கொள்கை
மத்தியில் பாஜக அரசு மீண்டும் பதவியேற்ற உடனேயே புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் இந்தி திணிப்புக்கான முயற்சியை மேற்கொண்டது. ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்த பின்னர் இந்தியை திணிக்க மாட்டோம் என சரணாகதி அடைந்தது. ஆனால் அதிலும் ஒரு செக் வைத்துத்தான் பின்வாங்கினர்.
ரயில்வேயில் இந்தி
இந்த கொதிநிலை இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் பேரல்களை ஊற்றுவது போல ரயில்வே துறை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழில் பேச தடை
ரயில்வே அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்- தமிழில் பேசக் கூடாது என்கிறது ரயில்வே அறிக்கை. அதாவது ரயில்வே ஊழியர்கள் தாய்மொழியாம் தமிழில் பேசுவதற்கு தடை விதித்திருக்கிறது மத்திய பாஜக அரசின் ரயில்வே துறை. தமிழகத்தில்தான் இந்த தடை. இதை வைத்துப் பார்த்தால் ரயில்வே துறையில் தமிழுக்கு தடை விதிக்கப்படுவதாகவே எடுக்க வேண்டியுள்ளது.
அப்பட்டமான இந்தி திணிப்பு
இது அப்பட்டமான இந்தி திணிப்பு. ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இந்தியை கற்பிக்கும் வகுப்புகள் மூலம் விரும்பாத ஒரு மொழியை திணித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்போது ருத்ரதாண்டவமாக சுற்றறிக்கை மூலம் தாய்மொழியாம் தமிழில் பேச தடை விதிக்கிறது.
பின்னணி இதுதான்
தமிழக ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவரை திணித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் சுட்டுப் போட்டாலும் வராது. மதுரை அருகே திருமங்கலத்தில் இந்திக்கார ரயில்வே ஊழியரால் பெரும் பேரழிவு விபத்து ஏற்படவிருந்தது. இந்த நிலையில் இப்போது வட இந்தியர்களுக்கு சாதகமாக தமிழை அழித்து விட்டு இந்தியைத் திணிக்கும் வேலையில் ரயில்வே இறங்கியுள்ளது.
திணித்தால் விளைவுகள் மோசம்
தமிழகத்தில் தமிழும் ஆங்கிலமும்தான் என்கிற இருமொழிக் கொள்கைக்குத்தான் இடம். இந்தி என்கிற வேற்று மொழியை நாங்கள் ஏன் கற்க வேண்டும் என்பது ஒரு போர்க்குரல். இந்த போர்க்குரலை மீண்டும் மீண்டும் அலட்சியம் செய்து வருகிறது மத்திய அரசு. இது செருப்புக்கேற்ப காலை வெட்டும் வேலை என்பது மத்திய அரசுக்குப் புரிந்தால் சரி.