பேரறிவாளன் விடுதலை:கொலையாளிகள், போராட்டம் என வசனம் பேசி.. செல்வாக்கை இழக்கும் தமிழக காங்.தலைகள்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்தமாக தமிழகமே கொண்டாடி வருகிறது. பேரறிவாளன் விடுதலை திர்ப்பு என்பது வரலாற்றில் இடம்பெறத்தக்கது என்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த தருணத்தில் தமிழக காங்கிரஸ் அறிவாளித்தனமாக கொள்கைப்பூர்வமாக நிலைப்பாடு எடுப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை, போராட்ட அறிவிப்பு ஆகியவை மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பேரறிவாளனும் அவரது பெற்றோரும் நடத்திய 31 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றி. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதித் திட்டம், பின்னணி தொடர்பாக எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை
ஆனால் 31 ஆண்டுகளுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர்களே பிரதான கொலையாளிகள்; குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு கொட்டடிக்குள் அடைக்கப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை நடந்த லட்சணம், அலட்சியம், மனிதாபினமே இல்லாத நடவடிக்கைகளை அதன் விசாரணை அதிகாரிகள் கார்த்திகேயன், ரகோத்தமன், தியாகராசன் என பலரும் அம்பலப்படுத்தி ஓய்ந்து போயினர். அப்போதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு இதில் என்னதான் பங்கு என்கிற இயல்பான கேள்வியை எழுப்பியிருந்தது.
பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில்தான் சட்ட ரீதியாக தமக்கு கிடைக்க வேண்டிய நீதியை உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்று இன்று விடுதலையாகி இருக்கிறார் பேரறிவாளன். உச்சநீதிமன்ற நீதியரசர்கள் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு, நாளைய பல வழக்குகளுக்கு ஆகப் பெரும் முன்னோடி தீர்ப்பு என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் இந்த தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழர் நிலமும் தமிழர் அரசியல் தலைவர்களும் வரவேற்று மகிழ்கின்றனர்.
தமிழக பாஜக
பேரறிவாளனை விடுதலை செய்யவே கூடாது என வாதிட்ட மத்தியில் ஆளும் பாஜக கூட அடக்கித்தான் வாசிக்கிறது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் நிலைப்பாடு
ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியோ, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என அறிவுப்பூர்வமாக கொள்கைப்பூர்வமாக எழுதியிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை லோக்சபா எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்று தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
தமிழகம் கடும் எதிர்ப்பு
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இத்தகைய நிலைப்பாடு இப்போது மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி கை கோர்க்கும் அத்தனை கூட்டணி கட்சிகளும் பேரறிவாளன் விடுதலையை வரவேற்கின்றன. பேரறிவாளன் விடுதலையை வரவேற்காவிட்டாலும் கொலையாளிகள், குற்றவாளிகள், நிரபராதிகள் அல்ல ஏகத்துக்கும் எகத்தாளமாக எழுதப்பட்டுள்ளது அந்த அறிக்கை. இன்னும் ஒரு படி மேலே போய் நாளை போராட்டம் நடத்தப் போவதுமாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏதோ திமுக கூட்டணியில் இருப்பதற்காக தமிழகம் காங்கிரஸை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஒற்றை எதிரியாக பாஜகதான் இருந்து வருகிறது. தமிழகத்தின் எதிரியாக பாஜக இருப்பதை அகற்றிவிட்டு நாங்களே எதிரி என தங்களுக்கு தாங்களே தமிழக காங்கிரஸ் கமிட்டி குழிதோண்டிப் புதைக்கிறது என்பதைத்தான் இந்த நிலைப்பாடு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.