கொரோனா பாதிப்பு: நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைக்க மாணவர்கள் வேண்டுகோள்
சென்னை: கொரோனா பாதிப்பால் மருத்துவ படிப்புகளுக்கு மே மாதம் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் பொய்த்து போனதால் வேறுவழியே இல்லாமல் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
தமிழக அரசும் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
நீட் தேர்வுக்கு தயாராக முடியாமல் மாணவர்கள் தவித்தும் வருகின்றனர். இதனால் மே மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்னும் சிலர் ஜூலை மாதத்தில் கூட் நீட் நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்கிற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக மாநில பாடக் கல்வி படிப்பை முடித்த மாணவர்கள் இப்போதுதான் தேர்வையே முடித்துள்ளனர். அதுவும் கொரோனா பாதிப்பால் இத்தேர்வுகளும் முழுமையடையவில்லை. இதனால் நீட் நுழைவுத் தேர்வை உடனடியாக மே மாதம் எதிர்கொள்வது என்பது பெரும் சிரமமாக இருக்கும் என்கின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள். ஆகையால் நீட் நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் வேண்டுகோள்.