பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்வதையுமே தொழிலாக வைத்திருந்த திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் முகத்திரையை பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண் வெளியே கொண்டு வந்தார். அதாவது இந்த 4 பேரும் இந்த பெண்ணுடன் நண்பர்கள் போல் பழகி தனியே அழைத்து சென்று காரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதால் அவரை அந்த 4 பேரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பாண்டியராஜன் பொள்ளாச்சி சம்பவத்தை விளக்கிய போது பெண்ணின் பெயரை பொதுவெளியில் வெளியிட்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் எஸ்பிக்கு எதிராக கண்டனத்தை எழுப்பினர்.
இந்தநிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வெளியிடப்பட்ட அரசிதழில் அந்த பெண்ணின் பெயரை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார். இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், கோவை எஸ்பி பாண்டியராஜன் மீதும் கோவை ஆணையர் பெரியய்யா மீதும் ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என பதில் அளித்தார்.