நீட்: விலக்கு பெறும் முயற்சி கோவிந்தா! மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவருக்கு உள்ஒதுக்கீடு!
நீட்: விலக்கு பெறும் முயற்சி கோவிந்தா! மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவருக்கு உள்ஒதுக்கீடு!
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் முயற்சிகள் கைவிடப்படுகின்றன. இதற்கு பதிலாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வினால் தமிழகத்தில் கிராமப் புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து மாணவி அனிதா உள்ளிட்டோர் தற்கொலை செய்து மாண்டனர்.
இதனையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016-17ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசும், பொது மக்களும், தமிழ்நாடும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றோம்.
சட்டசபையில் தீர்மானம்
31.1.2017 அன்று, நீட் தேர்வினை எதிர்த்து ஒரு சட்டமுன்வடிவினை இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே வேளையில், இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு, மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டும் வருகிறது.
உள் ஒதுக்கீடு
நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
ஆய்வு செய்ய ஆணையம்
இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர்-செயலராக செயல்படுவார்.
அரசுக்கான பரிந்துரைகள்
மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரி செய்ய, தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.