இனி யாரும் தப்ப முடியாது... மெரினாவில் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த சுற்றுலாத்துறை தீவிரம் காட்டிவருகிறது.
இதன் மூலம் சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்பது காவல்துறையின் நம்பிக்கையாக உள்ளது.
காமராஜர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைபகுதிகளில் மட்டுமே சிசிடிவி உள்ள நிலையில், இப்போது மனல் பரப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடம்
சென்னையில் அதிக மக்கள் கூடும் இடங்களில் பிரதான இடத்தில் இருப்பது மெரினா கடற்கரை. இங்கு வார நாட்களில் மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பகல் நேரம் முதலே கூட்டம் அலைமோதும். வீடுகளில் அடைந்துகிடக்கும் சென்னை வாசிகள் கடற்கரையில் காற்று வாங்க குவிவது வழக்கம்.
அட்டூழியம்
குடும்பத்தினருடன் கடற்கரைக்கு காற்று வாங்க வருபவர்கள் அங்கு நடக்கும் அட்டூழியங்களை கண்டு முகம் சுளிப்பதுடன், உடனடியாக வந்தும் வராததும் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடுகள் திரும்புவதும் நடக்கும். அதற்கு காரணம் காதலர்கள் என்ற பெயரில் அடிக்கப்படும் லூட்டிகள் பார்க்க சகிக்காது.
மோதல்
மேலும், கடற்கரை காற்றில் லயித்து அலுப்பு மறந்து அமர்ந்திருக்கும் பலரை திசைதிருப்பு அவர்களின் பணப்பைகள், மொபைல் போன்கள் களவாடப்படும் சம்பங்களும் அரங்கேறும். அதுவும் இரவு 8 மணிக்கு மேல் என்றால் கேட்கவே தேவையில்லை, இதற்காகவே கும்பல்கள் சுற்றுகின்றன.
சிசிடிவி கேமரா
இது தொடர்பாக சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தொடர்ந்து புகார்கள் வந்ததால், கடற்கரை மணல் பரப்பு முழுவது சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு சிசிடிவி பொருத்தப்பட்டு விட்டது என்றால் மெரினா முழுவதும் காவல்துறை கண்காணிப்புக்குள் வந்துவிடும்.