3 நாட்களாக நீடித்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை: 3 நாட்களாக நீடித்த தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Recommended Video
போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதில் தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
இதனால் மிக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனையடுத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலன் ஆணையம் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது; ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதும் ஏற்கப்பட்டன.
இதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.