மேலடுக்கு சுழற்சியோ.. தாழ்வு நிலையோ.. எதுவுமே இல்லை.. ஆனாலும் செம்ம மழை.. வெதர்மேன் பூரிப்பு
சென்னை: 2021 பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில் கடலூரில் முறையே 186 மற்றும் 112 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையோ அல்லது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ எதுவுமே இல்லாமல் இவ்வளவு மழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பிப்ரவரி மாதங்களில் பெரிய அளவில் மழை பெய்யாது. எப்போதாவது அபூர்வமாக பிப்ரவரியில் மழை பெய்யும். அப்படி ஒரு மழையைத்தான் தமிழகம் கடந்த 21 மற்றும் 22ம் தேதி களில் பார்த்தது.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
பிப்ரவரி மழை
குறிப்பாக புதுச்சேரி மற்றும் கடலூரில் ஒரே நாளில் 19 செமீ மழை பெய்தது. இந்த மழையால் இரண்டு மாவட்டங்களிலும் வெள்ளத்தில் சாலைகள் மூழ்கின. பிப்ரவரியில் இப்படி ஒரு மழையை இந்த இரண்டு மாவட்டங்களுமே சந்தித்தது இல்லை. இயற்கையின் அதிசயம் போல் வந்த மழையை கண்டு மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
எதுவுமே இல்லை
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், உண்மையில், கடலூரில் 300 மி.மீ. மழை எந்தவொரு குறைந்த அழுத்தமும் இல்லாமல் அல்லது வளிமண்டல மேலேடுக்கு சுழற்சியும் இல்லாமல் இப்படி ஒரு மழை கண்டுள்ளது. குறிப்பாக கடலூரில் உள்ள மக்களும், புதுச்சேரி மக்களும் இப்படி ஒரு மழையை வாழ்நாளில் பிப்ரவரி மாதத்தில் கண்டிருக்கிறார்கள், அதை அவர்கள் சிறிது நேரம் மறக்க மாட்டார்கள்.
சாதனை முறியடிப்பு
இருப்பினும் 1984, 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. 21.02.2021 அன்று காலை 8.30 மணிக்கு 24 மணி நேரத்தில் கடலூரில் 186 மிமீ பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 09.02.1930 அன்று பெய்த மழை 119 மிமீ சாதனையை முறியடித்தது.
மார்ச்சில் எப்படி
21.02.2021 அன்று காலை 8.30 மணிக்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 192 மிமீ பதிவாகி உள்ளது., இது 27.02.2000 அன்று 117 மிமீ அமைக்கப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது. தமிழகம் உட்பட தீபகற்ப இந்தியாவின் பெரும்பகுதிக்கு ஒட்டுமொத்த வறண்ட நாட்கள் தான் இனி இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மாம்பழ விளைச்சல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மழை பெய்தது தமிழகத்திற்கு ஆச்சரியமாக உள்ளது. மார்ச் மாதத்திலும் இதே போக்கு தொடருமா என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.