சென்னை, காஞ்சி, திருவள்ளூரில்.. தொடர்ந்து வெளுக்கப் போகும் மழை.. வெதர்மேன் ஹேப்பி நியூஸ்
Recommended Video
சென்னை: இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் 194 நாட்களுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. குறைந்த அளவிலான மழை என்கிற போதிலும் இந்த மழையை மக்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையை சில இடங்களில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவங்களும் உண்டு.
சிறப்பு மழை
இந்த நிலையில் இன்றும் மேற்கண்ட 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற நல்லச் செய்தியை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்பிய பதிவில் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு மழை இன்றும் பெய்ய உள்ளது.
பெய்த மழை
அதே சமயம் மற்ற இடங்களில் மழை இருக்காது. இன்று காலை அழகாக உதயமானது சூரியன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேறு உருவாக போகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம், வெப்பம், மழை பெய்ய சாதகமான சூழல் உருவாகியுள்ளது. நேற்று பெய்த மழையை போல் இன்றும் பெய்யும் என எதிர்பார்க்காதீர்.
வடசென்னை
இன்று சில பகுதிகளில் மழை பெய்யாமல் இருக்கும். குறிப்பாக வடசென்னை. வானிலை ரீதியாக இந்த பகுதி மிகவும் வறண்ட பகுதியாகும். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழை பெய்தது. இந்த முறை வடசென்னையில் நல்ல மழை பெய்யும். இது அவர்களுக்கான நேரம். மீண்டும் சொல்கிறேன், எல்லா இடங்களில் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்க வேண்டாம். அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.
மழைக்கு வாய்ப்பில்லை
நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 29-ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினால் நமக்கான மழை குறையத் தொடங்கிவிடும். அந்த சமயத்தில்தான் நம்ம டிவி சேனல்களில் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானது. தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என பிளாஷ் ஓடும்.
நேரடி மழை
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான நேரங்களில் நமக்கு மழை கிடைத்துள்ளது என்றால் அதற்கு காரணம் குறைந்த காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பே ஏற்படும் வெப்பச்சலனத்தால் மட்டுமே. ஜூன் முதல் செப்டம்பர் வரை உருவாகும் காற்றழுத்தங்களால் தமிழகத்துக்கு நேரடி மழை கிடைக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.