கதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு!
சென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை வைக்க காசு இல்லாத நிலையில் தான் பல வீட்டில் பெண்கள் தவிக்கிறார்கள். கிடைக்கும் அத்தக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கட்சிகள் தரும் ரூ.200க்காக கோஷம் போட சென்று வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது...
இப்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகளை விட, குடிதான் பெரிசு என்ற அளவுக்கு முழு நேரமும் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால் குடித்துவந்த ஆண்கள், தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் பலர் பகல் நேரக் குடிகாரர்களாகவே மாறிவிட்டனர்..
இதனால் இவர்களது மனைவி அல்லது தாய் வருமானத்துக்கு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்காக தினசரி ரூ.200 சம்பளத்துக்கு பல பெண்கள் செல்கிறார்கள்.
40ம் நமக்கே.. .. அபார வெற்றி பெறுவோம் தீவிரப் பிரச்சாரத்தில் கார்த்தி சிதம்பரம்
பரிதவிக்கும் மனைவி
எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறார். ஒரு நாளைக்கு அவர் ரூ.700 முதல் ரூ.1000 சம்பாதிக்கிறார்... அதில் ஆட்டோ வாடகையாக 250 கொடுத்துவிடுவார். மீதமுள்ள ரூ.600ல், சாப்பாடு செலவு பெட்ரோல் செலவு என போக சுமார் 300 தான் நிற்கும். அந்த காசோடு அப்படியே இரவு டாஸ்மாக்குக்கு செல்லும் அவர் குறைந்தது குவாட்டர் முதல் ஆப் அடித்துவிட்டே வீட்டுக்கு வருகிறார். இதனால் அவர் வீட்டுக்கு காசே தருவதில்லை. என்றாவது ஒரு நாள் தான் ரூ.1000க்கு அவருக்கு ஓடும். அப்படி ஓடும் நாளில் தான் 200 ரூபாயோ, 100 ரூபாயோ மனைவிக்கு அவர் தருவார். இதனால் அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்கிறார்.
குடியால் இழந்த பணம்
இதேபோல் எனது பக்கத்துவீட்டில் வசிக்கும் கொத்தனாருக்கு தினசரி சம்பளம் ரூ.700, அவருக்கு 2 குழந்தைகள், ஒரு குழந்தை பெரியவள் ஆகிவிட்டாள். இன்னொரு குழந்தை படித்துவருகிறான். தினமும் இவர் குடித்துவிட்டு வருவதால், இவர்களது குடும்பத்துக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. எல்லா நாட்களும் வேலை இருக்காது என்பதால் வறுமையில் பிடியில் குடும்பம் தவிக்கிறது. கொத்தனாரின் மனைவி தினமும் 180 ரூபாய் சம்பளத்துக்கு அருகில் உள்ள கடைக்கு செல்கிறார்.
பயன்படுத்தும் கட்சிகள்
இந்த மாதிரி ஏராளமான குடும்பங்கள் குடியால் பாதிக்கப்பட்டுள்ளதை என்னைப்போல் நீங்களும் பார்த்திருப்பீர்கள். குடியால பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் வறுமையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் கூட்டமோ, மாநாடோ நடத்தினால் ஒவ்வொரு ஊரிலும் அந்த பகுதியின் கட்சி செயலாளர்கள் மூலம் இவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதற்காக அரசியல் கட்சியினர் பெண்களுக்கு கொடுக்கும் சம்பளம் சுமார் ரூ.200.
வேறு வழியில்லை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும். இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்துவோம், லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வீதி வீதியாக அரசியல் கட்சிகள் கார்களில் ஊர்வலம் செல்கிறார்கள். அவர்களுக்கு கீழே ரூ.200க்காக கட்சி கொடிகளை ஏந்திக்கொண்டு வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் செல்கிறார்கள். அவர்கள் அன்று வாங்கும் ரூ.200ஐ வைத்து மகளுக்கு நல்ல சாப்பாடு ஆக்கி போடணும், இவங்களோட நாளு நாள் வந்து மகனுக்கு ஒரு சட்டை எடுத்து போடணும் என்று மனக்கணக்கோடு கட்சிக்கொடிகளுடன் வீதிகளை கடந்து செல்வதை வெகுஇயல்பாய் நாம் பார்த்திருப்போம்.
ஆண்கள் பரிதபாம்
பெண்களாவது ரூ,200 வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்கள். ஆண்களின் நிலை அதைவிட மோசம், அவர்கள் வாங்கும் 300ஐ எடுத்துக்கொண்டு நேராக செல்வது எங்கு தெரியுமா? டாஸ்மாக் கடைக்குத்தான்... அப்படியே அந்த பணத்தில் பிரியாணி, குவாட்டர் சாப்பிட்டு விட்டு, அந்த ஏரியாவில் எங்க கட்சிதான் ஜெயிக்கும், எங்க தலைவருதான் இந்த தடவை சிஎம்மா வருவாரு என அங்கே அலப்பறைகளை கொடுத்துவிட்டு, சிலபல ஆபாச அர்ச்சனைகளை காண்போர் மீது தூவி விட்டு தள்ளாடியடி வீட்டுக்கு வெறுங்கையோடு நடந்து செல்வதை வெகு இயல்பாய் நாம் பார்த்திருப்போம்.
வேலையின்மை
நம் தேசத்தில் வேலை கிடைக்காததை அவங்களுடைய இயலாமையாகவே மக்கள் பார்க்கிறார்கள். இது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் ஆட்சிக்கு வருபவர்கள் நினைத்தால் சுயமான வேலை வாய்ப்பு மற்றும் திடமான பொருளாதார நிலையை ஒவ்வொரு வீட்டுக்கும் ஏற்படுத்திவிட முடியும். அதற்குதான் அவர்கள் முயற்சிப்பதே இல்லை. குடிக்கு அடிமையாக்கி அந்த பணத்தில் இலவச திட்டங்களை வாரிக் கொடுத்து நம் மக்களை வறுமையாகவே அரசியல் கட்சிகள் வைத்திருக்கின்றன. உண்மையில் தமிழகம் வறுமையான மாநிலம் இல்லை. ஆனால் குடியால் வறுமைக்கு தள்ளப்பட்ட மாநிலமாக மாறிவருகிறது. அதற்கு ஆயிரம் பரிதவிப்போடு ரூ.200க்காக அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கோஷம் போடும் பெண்களே சாட்சி...