இதைப் போட்டுக்கங்க.. ஒரு பய உங்க செயினை திருட முடியாது.. பெண்கள் ஹேப்பி.. சூப்பர் போலீஸ்!
சென்னை: சென்னை திநகரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஷாப்பிங் செல்லும் பெண்களிடம் இருந்து நகைத் திருட்டு நடைபெறாமல் தடுக்க நகைக் கவசத்தை போலீஸார் வழங்கினர்.
Recommended Video
தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் அடுத்த மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது மக்கள் புத்தாடைகளை வாங்குவது வழக்கம். அது போல் ஐப்பசி மாதம் என்பதால் திருமணங்கள் நடைபெறக் கூடும்.
அது போல் லாக்வுடனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் எளிமையாக நடந்திருக்கும். இந்த நிலையில் இவர்களுக்கு தலை தீபாவளி என்பதால் அந்த தீபாவளியை வெகுவிமரிசையாக கொண்டாட விரும்புவார்கள்.
நகை அணிகலன்கள்
அவரவர் வசதிக்கேற்ப துணிமணிகள், நகை, அணிகலன்கள் வாங்கி தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகளை கொண்ட திநகரில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மக்களும் கொரோனாவால் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே துணி வாங்க குவிகிறார்கள்.
திருடர்கள்
பொதுவாகவே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட முயற்சிப்பர். பெண்கள் ஏமாறும் நேரத்தில் பணம், நகை, கைப்பைகளை அபேஸ் செய்யவே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இவர்களை கண்காணிக்க போலீஸார் உயர்கோபுரங்கள் அமைத்து அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிப்பர்.
திருட்டை தடுக்க
இந்த நிலையில் இந்த முறை கொரோனாவை ஒழிக்க முகக் கவசம் போடுவது போல் திருட்டை தடுக்க நகைக் கவசத்தை போலீஸார் வழங்கி வருகிறார்கள். தி நகரில் பிரபல துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த பெண்களுக்கு போலீஸார் நகைக் கவசத்தை வழங்கியுள்ளார்கள்.
ஜிப்
அந்த நகைக் கவசத்தை கழுத்து வழியாக போட்டு கொண்டு ஜிப் போட்டு கொண்டால் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகை முதல் கில்ட் நகை வரை அத்தனையும் மறைந்திருக்கும். இதனால் திருடர்கள் குட்டிக்கரணம் அடித்தாலும் திருடவே முடியாது. இதுகுறித்து பெண்கள் சிலர் கூறுகையில் இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி
இதனால் நாங்கள் திருட்டு பயமின்றி எத்தனை கூட்ட நெரிசல் இருந்தாலும் நாங்கள் எளிதாக ஷாப்பிங் மேற்கொள்ளலாம். இந்த புது முயற்சிக்கு போலீஸாருக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த பெண்கள் தெரிவித்தனர். முகக்கவசத்தால் கொரோனாவை ஒழிப்போம். நகைக் கவசத்தால் திருட்டை தடுப்போம்.