துயரத்தில் மக்கள்... குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமை... என்ன செய்யப் போகிறது அரசு ? -காங்கிரஸ்
சென்னை: ஊரடங்கால் வேலையிழந்து சொல்லொண்ணா துயரத்திலும் வறுமையிலும் வாடும் மக்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார தொகுப்பாக வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுவையிலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை- முதல்வர் நாராயணசாமி
ஊரடங்கு
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதாக அந்த தளர்வுகள் இல்லை. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர்.
துயரம்
பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. கடந்த மார்ச்-மே மாதங்களில் 53 சதவிகித குடும்பத்தினரில், குறைந்தது ஒருவராவது வேலை இழந்துள்ளதாக, தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஊரடங்கால் நகர்ப்புறத்தினர் 50 சதவிகிதத்தினரும், கிராமப்புறத்தில் 56 சதவிகிதத்தினரும் வேலை இழந்துள்ளனர்.
அழகிரி விவரிப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஊரடங்குக்கு முன்பு 37 சதவிகித கிராமப்பற குடும்பத்தினர் பணியாற்றினர். இவர்களில் மூன்றில் 2 சதவிகிதத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்கு திரும்பினர். ஆனால், 1 சதவிகிதத்தினர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் தமிழக மக்களின் நிலைகுலைந்து போன வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளன.
ரூ.5,000 தருக
இவர்களுடைய வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்காக ஏதும் நிதி ஒதுக்கப்பட்டதா? விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் உதவியும், மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு போதுமானதா? என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும். மேலும், பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.