இயக்குநர் மணிரத்தினத்திற்கு காங்கிரஸ் ஆதரவு... வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தல்
சென்னை: கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்,
மத்தியில் பாஜக ஆட்சிபொறுப்பேற்றதில் இருந்து இந்து தேசியவாதிகள் என்ற போர்வையில் பிற மதத்தினர் மீது தாக்குதல் செய்வதும், படுகொலை செய்வதும் தொடர்கதையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் அதிகளவில் குறிவைத்து தாக்கப்படுவதுடன் கருணையே இல்லாமல் சில இடங்களில் கொலை செய்யப்படுவதும் கூட நடப்பதாக கூறியுள்ளார்.
இந்து தேசியவாதிகள் என்ற போர்வையில் சிலர் நடத்தும் மோசமான தாக்குதல்களை பாஜக தலைவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும், காவல்துறையினரும் வழக்குப்பதிவதில்லை எனவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் சகிப்பின்மை பெருகிவருவதால் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கும்பல் வன்முறை தொடர்பாக இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திரா குஹா உள்ளிட்ட 49 பிரபல நபர்கள் மோடிக்கு கடிதம் எழுதிய நிலையில், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயல் என விமர்சித்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை விட சர்வாதிகார நோக்கத்தில் மோடி ஆட்சி செயல்படுவதற்கு இதைவிட வேறு உதாரணம் இல்லை என கூறியுள்ளார்.
வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி கடிதம் எழுதிய காரணத்துக்காக 49 பேர் பதிவு செய்யப்பட்டுள்ள தேசதுரோக வழக்கை திரும்ப பெற மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.