திமுக, காங்கிரஸ் மீது சாபமிடுவதா...? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்
சென்னை: திமுகவும், காங்கிரசும் அழியும் எனப் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விரக்தியின் விளிம்பிலும், வீழ்ச்சிப் பள்ளதாக்கிலும் இருந்து கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அழிவு
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது இயல்பிற்கு மாறாக, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மீது சாபமிட்டு பேசியிருக்கிறார். தி.மு.க.வும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். விரக்தியின் விளம்பிலும், வீழ்ச்சிப் பள்ளத்திலும் இருந்து கொண்டு பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
வரலாறு
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தும், பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தும் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தை மதரீதியாக தூண்டி விட்டு பிணம் தின்னும் அரசியல் நடத்தியது யார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
ஆளும் கட்சி மீது மக்கள் பெரும் வெறுப்பில் உள்ளனர்.. எல்லோருக்கும் மிக்க நன்றி.. ஸ்டாலின் நெகிழ்ச்சி
ஊருக்கு உபதேசம்
இதையொட்டி, வடமாநிலங்களில் வகுப்பு கலவரத்திற்கு வியூகம் வகுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை.
இரண்டாம் தரம்
2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க., முத்தலாக் சட்டத்தையோ, குடியுரிமை சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? இஸ்லாமியர்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன.