குறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்
சென்னை: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் சுமார் 60 ஆண்டுகளாக நல்லுறவு இருக்கிறது. மலேசியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3 வது இடமாக இந்தியர்கள் இருக்கிறார்கள்.
வெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா?
பாதிப்பு ஏற்படும்
சுமார் 20 லட்சத்திற்கும் மேல் இந்தியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள். அங்கு வாழ்கின்ற தமிழர்களைத்தான் இந்தியர்கள் என்று கூறுவார்கள்.
பெரும்பாலான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை (பாமாயில்) தோட்டங்களிலும் வேலைசெய்து வருகிறார்கள். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெய்யை கணிசமான அளவுக்கு குறைத்துவிட்டால், அங்கு வேலை செய்யும் தமிழர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
அந்நிய செலவாணி
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற சுமார் 5 லட்சம் தமிழர்களும் உணவு விடுதிகளிலும் தொழில் நுட்பத்துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சம்பாதிக்கும் தொகையில் 90 சதவிகிதத்தை தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய செலவாணி வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
திடீர் தீர்மானம்
இதையெல்லாம் யோசிக்காமல் மோடி அரசு திடீரென்று பாமாயிலின் இறக்குமதி அளவை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானம் போட்டிருப்பது, இந்திய அரசு காஷ்மீரின் தனித்துவ அதிகாரத்தை ரத்து செய்ததை மலேசியா கண்டித்ததற்கு பழிவாங்கத்தான் இறக்குமதியை குறைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.
தமிழர்கள்
பிரதமர் மோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது. காரணம் மலேசியாவிலிருக்கும் இந்தியர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதிபேர் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தை சேர்ந்த தென்னிந்தியர்கள்தான்.
கண்டனம்
ஆதலால், வட இந்திய மனோபாவம் கொண்ட பிரதமர் மோடி குறுகிய நோக்கத்தில் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.