ரஜினிக்கு காங்கிரஸ் கண்டனம்... வகுப்புவாத சக்திகளுக்கு இரையாகி விடாதீர்- கே.எஸ்.அழகிரி
சென்னை: பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் ரஜினி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள் என ரஜினிகாந்துக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ரஜினிக்கு எதிராக மேலும் ஒரு புதிய வழக்கு.. விஸ்வருபம் எடுக்கும் பெரியார் குறித்த சர்ச்சை!
அரசியல் சார்பு
அரசியலுக்கு வருவதாகக் கூறி, இன்னும் உறுதியாக வராத நிலையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்றுத் தந்து, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
மூடிமறைப்பு
1971 இல் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கூறுகிற நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் 1992 டிசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து, ‘அயோத்தியில் நடந்த அயோக்கியத்தனம்" என்று கடுமையாக விமர்சனம் செய்ததை ஏன் நினைவு கூறவில்லை ? நடிகர் ரஜினிகாந்த் 1971 சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு இந்த சம்பவங்களை நினைவு கூறாமல் மூடி மறைத்தது ஏன் ? இதில் உள்ள அரசியல் வகுப்புவாத உள்நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கூறுவாரா ?
ரஜினி பேட்டி
துக்ளக் ஆண்டு விழாவில் கூறிய கருத்தை நியாயப்படுத்துகிற வகையில் ‘கற்பனையாக கூறவில்லை, நடந்ததைத் தான் சொன்னேன்" என்று கூறியதோடு, இந்த சம்பவம் ‘மறைக்கக் கூடிய சம்பவம் அல்ல, ஆனால் மறக்கக் கூடிய சம்பவம்" என்று விளக்கவுரை கூறியிருக்கிறார்.
இரையாக வேண்டாம்
நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு இன்னும் இருக்கிற நன்மதிப்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள். ‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்" என்று அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.