தமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு
சென்னை: அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலாகும் நிலைக்கு சென்றுக் கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தை ஆளுகிற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது . கடந்த 2015 முதல் 2018 வரைஇயற்கை சீற்றங்களால் வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக அரசு நான்கு தவணைகளில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. இதில் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியது வெறும் ரூபாய் 3700 கோடி மட்டுமே. இதன்மூலம் மோடி அரசு தமிழகத்தை எந்தளவிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை .
இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2018-19 இல் அது ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை ரூபாய் 1 லட்சம் கோடியாக எட்டியுள்ளது. மேலும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ரூபாய் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட நிதிநிலைமையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அ.தி.மு.க. அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், இனி எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.