அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி மன்னன்... அவர் நையாண்டியை எங்களிடம் காட்டக் கூடாது -கே.எஸ்.அழகிரி
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பொருந்தாத வாதங்களை கூறி நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஆயிரம் குழப்பங்களை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்?
சந்தர்ப்பவாத கூட்டணி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல. தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் அடிக்கடி கூடி விவாதித்து முடிவெடுப்பதைப்போல அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைகள் குறித்து கூடி பேசியிருக்கிறதா? விவாதித்திருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகள்
கூட்டணிக் கட்சிகள் என்பது அடிக்கடி கூடிப் பேசவேண்டும். கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, கூட்டணி கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைபிடிக்காத அ.தி.மு.க. கூட்டணியை என்னவென்று அழைப்பது?
அதிமுகவுக்கு கேள்வி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் திரு எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கிறாரே தவிர, கூட்டணி கட்சிகள் என்ற முறையில் என்றைக்காவது கூடி விவாதித்திருக்கிறாரா?
சொல்லுங்கள் பார்ப்போம்
அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பெயரை டி.ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா? கடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது.
நையாண்டி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்த்தால் கடந்த மக்களவை தேர்தலை போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. இந்த அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு மட்டுமல்ல, அந்த கட்சியின் தொண்டர்களிடமும் இருக்கிறது. எனவே, எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.