கடன் கொடுத்தால் குண்டர்களுடன் சென்று மிரட்டுவீர்களா...? ஆக்சிஸ் வங்கி மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
சென்னை: கடன் கொடுத்தால் குண்டர்களுடன் சென்று மிரட்டுவதா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
மேலும், ஆக்சிஸ் வங்கி கடன் வசூல் பிரிவு ஊழியர்கள் அசிங்கப்படுத்தியதால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாயி ராஜாமணி என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட்... தள்ளிப்போகும் அறிவிப்பு... ஏமாற்றத்தில் நிர்வாகிகள்
கடன் தவணை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய விவசாயி ராஜாமணி அங்குள்ள ஆக்ஸிஸ் வங்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் விவசாயக்கடன் பெற்றிருந்தார். தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனைக் கட்ட இயலவில்லை. எனினும் மிகவும் சிரமப்பட்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தவணைகளை செலுத்திவந்துள்ளார்.
கால அவகாசம்
கொரோனா காலத்தில் அவரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று பல்வேறு வகைகளில் அறிவித்திருக்கிறது. இதை மீறுகிற வகையில் கடந்த இரு வாரங்களாக வங்கிக் கிளை மேலாளர் குண்டர்களுடன் வசூல் பிரிவு ஊழியர்கள் ராஜாமணி தோட்டத்திற்கு சென்று தொடர்ந்து மிரட்டியிருக்கின்றனர்.
கிராமமக்கள் முன்னிலையில்
'கடன் கட்ட முடியாத உனக்கு எதுக்குடா காடு, தோட்டம்' என்று மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் ஏசியுள்ளனர். அதோடு அவரது குடும்பத்தினரையும் வார்த்தைகளால் சொல்ல இயலாத வகையில் அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். இதனால் கிராம மக்களிடையே அவமானப்படுகிற நிலை ஏற்பட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த விவசாயி ராஜாமணி செல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலைவழக்கு
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உத்தரவுகளை மீறி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்திலும் கடுமையான கடன் வசூலிப்புப் பணிகளில் ஈடுபட்ட தாராபுரம் நகர ஆக்சிஸ் கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோரின் அத்துமீறிய நடவடிக்கைகளின் காரணமாகத்தான் விவசாயி ராஜாமணி தற்கொலை செய்யப்பட்டார். இந்த தற்கொலைக்கு அவர்கள் தான் பொறுப்பாகும். எனவே, இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.