பொருளாதாரத்தை உயர்த்த மோடியிடம் என்ன மந்திரம் உள்ளது? கே.எஸ்.அழகிரி கேள்வி
Recommended Video
சென்னை: சரிவுப் பதையில் செல்லும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார் என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ள நிலையில், ஏற்றம் இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பில்லாமல் கூறுவது வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். வாகன உற்பத்தி குறைந்தது பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊலா, ஊபர், உள்ளிட்ட காரணங்களை கூறி அப்பட்டமாக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார்.
2 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், விற்கப்படாத குடியிருப்புகளின் எண்ணிக்கை 12 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
முத்ரா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் பெருகியதாக எந்தக் குறிப்பும் இல்லை எனக் கூறியுள்ள அழகிரி, முத்ரா கடன் திட்டங்களால் வேலைவாய்ப்புகள் பெருகாது என்பதை நிதியமைச்சரால் மறுக்க முடியுமா? என வினவியுள்ளார்.
புண்ணுக்கு புணுகு தடவும் ஜால வித்தையை கைவிட்டு அறுவைச் சிகிச்சை செய்து பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக அழகிரி தெரிவித்திருக்கிறார்.