பயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் கோஷ்டிப்பூசலுக்கும் அப்படி என்ன தான் நெருக்கமோ தெரியவில்லை, காலம் காலமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிந்து நாளை மறுதினம் வரும் முடிவுக்காக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தமிழக காங்கிரசில் மட்டும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர புகார்களை முன்வைப்பதால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நொந்துபோய் உள்ளாராம்.
கோவையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் என்ற முறையில் மயூரா ஜெயக்குமார் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் ஆப்செண்ட் ஆகிறார்களாம்.
பாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே!
குவியும் புகார்கள்
இது குறித்த புகாரும் அழகிரிக்கு வந்துள்ளதாம். இதுபோதாதென்று, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தரப்பில் இருந்தும் சில புகார்கள் கே.எஸ்.அழகிரியிடம் முன்வைக்கப்பட்டனவாம்.
ஈவிகேஎஸ் ஆதரவாளர்
திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசருக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றிய அளவுக்கு கூட, ஈ.வி.கே.எஸ்.ஆதரவாளரான ஜெரோம் ஆரோக்யராஜ் பார்க்கவில்லை எனக் கூறப்பட்டதாம்.
அழகிரிக்கு அழுத்தம்
மேலும் ,ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி லோக்கல் நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரிக்கு அழுத்தம் தருகிறார்களாம். பொறுத்து பொறுத்து பார்த்த அழகிரி டென்ஷனாகி விட்டாராம்.
இப்பப் போய் எப்படிப்பா
இதற்கு இது நேரமல்ல தேர்தல் முடிவு வரட்டும் என்றும், மத்தியில் ஆட்சியை பிடிக்க ராகுல் அரும்பாடுபட்டு வரும் நிலையில் நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாக தெரிகிறதா எனவும் குமுறினாராம்.
தேர்தல் முடிவு எப்படி வந்தாலும், மே 23-க்கு பிறகு கே.எஸ்.அழகிரிக்கு கட்சி பஞ்சாயத்துகளில் கவனம் செலுத்த வேண்டும் போல தெரிகிறது.