கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திடீரென நிறுத்தியது ஏன்? கே.எஸ். அழகிரி
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக பத்திரிகையாளர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென சந்திக்காமல் நிறுத்திக் கொண்டது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ். அழகிரி தமது ட்விட்டர் பதில் எழுதியுள்ளதாவது:
கொரோனா நோயை எதிர்த்து சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.
சமீபகாலமாக பத்திரிகையாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.