யாரு திட்டத்துக்கு யாரு அடிக்கல் நாட்டுவது? பிரதமர் மோடிக்கு எதிராக வரிந்துக் கட்டும் காங்கிரஸ்!
சென்னை: தமிழகத்தில் நேற்று பிரதமர் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது பரிசீலனை செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டவைகள் என தமிழக காங்கிரஸ் கூறியிருக்கிறது.
மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது என கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அடிக்கல்லுக்கு அடிக்கல்
சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பு ரூபாய் 5852 கோடி செலவில் 21 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதே திட்டம் ரூபாய் 1655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைத்திட அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் முன்னிலையில், அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் 8.1.2009 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே டாக்டர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களும், அடிக்கல் நாட்டிய திட்டங்களும் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். குறிப்பாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், மதுரை - தேனி ரயில் வழித்தடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், சென்னை - பெங்களூர் விரைவு வழிச்சாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திரு. டி.ஆர். பாலு அவர்களின் முயற்சியால் இந்த திட்டத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஸ்டாலினுக்கு துணிச்சல்
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களுக்கு தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதை புள்ளி விவரங்களோடு முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.2 சதவிகிதம் மட்டுமே என்று பிரதமர் மோடியின் முகத்திற்கு நேராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது அவரது அரசியல் பேராண்மையையும், துணிவையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
உண்மைக்கு மாறாக
தமிழ் மொழியை பிரபலப்படுத்த கடும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கிறார். ஆனால், நடைமுறையில் இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு வழங்கப்படுகிற முன்னுரிமை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுவதில்லை.