அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல்
சென்னை: அதிமுக அரசை தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக முதலமைச்சராக நீடித்ததே எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய சாதனை என்றும், மற்றபடி அரசு நிர்வாகத்தில் அவர் எந்த சாதனையும் நிகழ்த்தவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
213 மனுக்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப்-4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி ஆட்சியின் முத்திரைப் பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா ?
குற்றச்சாட்டு
தமிழக நலன்களை பாதிக்கிற, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை, கரும்பு சாகுபடி குறைப்பு, குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
கடன் சுமை
தமிழக அரசின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி. நிதி பற்றாக்குறை ரூபாய் 59 ஆயிரத்து 346 கோடி. மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடியையும் சேர்த்து தமிழக அரசு ஏறத்தாழ ரூபாய் 8 லட்சம் கோடி கடன் சுமையில் தவிக்கிறது. இதை மூடி மறைப்பதற்குத் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
நாடகம்
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தணிப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும். எனவே, எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். எனவே, தமிழக மக்கள் மிகுந்த வேதனையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
மக்கள் தயார்
எப்பொழுது அடுத்த பொதுத் தேர்தல் வரும், அப்போது எப்படி அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிகிற வகையில் வாக்குகளை அளிக்கலாம் என மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது. சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.