மின்வாரிய ஊழியர்களுக்கு ஷாக் ப்ரூஃப் ஆடைகள்... மின்வாரியம் புதிய முயற்சி
சென்னை: உயர் மின்னழுத்த கம்பிகளில் பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்காக பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட ஷாக் புரூஃப் ஆடைகளை தமிழக மின்சார வாரியம் வாங்கியுள்ளது.
பிரத்யேக முறையில் எக்கு இழைகளால் தயாரிக்கப்பட்ட அந்த ஆடைகளில் மின்சாரம் பாயாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உயர் மின்னழுத்த கம்பிகளில் பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை இன்ஸ்யூரன்ஸ்ம் செய்துள்ளது தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்.
அவசியத் தேவை
மின்வாரியத்தை பொறுத்தவரை மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள மிக முக்கியமானத் துறையாகும். மின்சாரம் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாத நிலை தான் இன்று ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் மக்களின் அன்றாட, அவசியத் தேவைகளில் மின்சாரத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
புதிய முயற்சி
மின்வாரியத்தில் பணிபுரியும் போர்மேன்களுக்கு அந்தரத்தில் தான் வேலை. வெயிலோ, காற்றோ, மழையோ, பனியோ, மின் கம்பங்களில் ஏறி மின் இணைப்பை சரி செய்யும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையில் அதனை போக்கும் விதமாக தமிழக மின்சார வாரியம் சார்பில் ஷாக் புரூப் ஆடைகள் வாங்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உயர்மின்னழுத்தம்
இந்நிலையில் அந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, துணை மின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் ஊழியர்களுக்கு ஷாக் புரூஃப் பாரடே எனப்படும் மின் கடத்தாத ஆடைகளை அளிக்கிறது தமிழக மின்சார வாரியம். மற்ற மின்வாரிய ஊழியர்களை விட இந்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கு அதிக பாதுகாப்பின்மை உள்ளதால் முதற்கட்டமாக அவர்களுக்கு மட்டும் இந்த ஆடைகள் வழங்கப்பட உள்ளன.
பழுதுகண்டறிதல்
துணை மின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பி இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும், எந்த இடத்தில் கம்பி அறுந்துள்ளது என்பதையும் கண்டறிய அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தவும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டிருக்கிறது .