நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு.. தயாராகும் தமிழக மின்சார வாரியம்
சென்னை: நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மின்சார வாரியம் தயாராகியுள்ளது.
Recommended Video
கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் ஊரடங்கை கடைப்பிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி.
உலக நாடுகள் நம்மை பார்த்து வியந்து நம்மை போல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா எனும் இருளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிய வேண்டும். நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும்.
அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, அகல் தீபம் ஏற்றி வைக்கலாம். செல்போன், டார்ச்லைட்டுகளில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது போல் ஒரே நேரத்தில் 130 கோடி இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பின்னர் ஒரே நேரத்தில் அவற்றை ஆன் செய்து மின்சார வாரியத்திற்கு சவாலான காரியம் ஆகும்.
இதற்காக தமிழக மின்சார வாரியம் சில தயார் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி அனைத்து செயற்பொறியாளர்களும் நாளை இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை பணியில் இருக்க வேண்டும். சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும். எஸ்எல்டிசியின் அறிவுரைபடியின் வோல்டேஜ் சரியாக பராமரிக்கப்படும்.
பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை அணைக்க வேண்டாம். அது போல் 9 நிமிடங்கள் கழித்து அனைவரும் மின்விளக்குகளை எரிய விடும் போது அதிக அளவில் மின் நுகர்வு ஒரே நேரத்தில் ஏற்படும் என்பதால் அதை செய்ய மின் மாற்றிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.