டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் வெளியீடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் டிஎன்பிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் இதுவரை 35 பேரை கைது செய்துள்ளார்கள். இதில் காவலர் சித்தாண்டி, ஜெயக்குமார், ஐயப்பன், ஓம் காந்தன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகாக பார்க்கப்படுகிறார்கள்.
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் டிஎன்பிஎஸ்சி தடைவிதித்துள்ளது. குரூப் 2 ஏதேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருவதால் விரைவில் அதில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் அதில் 6 முக்கிய சீர்திருத்தங்களை அரசு செய்துள்ளது. இதன்படி டிஎன்பிஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம், தேர்வு நடைமுறைகள் முழுதும் நிறைவடைந்த பின்னர், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. கைது செய்யப்பட்ட ஐயப்பன் யாருடைய நண்பர் தெரியுமா.. ஜெயக்குமார் அதிரடி
இந்நிலையில் முறைகேடுகளைக் களையும் நோக்கிலும் தேர்வு மற்றும் திருத்தம் நேர்மையான முறையில் நடந்ததை உறுதி செய்வதற்காக 2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்களின் விவரங்கள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்களின் பெயர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, புகைப்படம், தேர்வெழுதிய மையம், அதன் முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளது.