செல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2015 ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சிக்கான குருப்1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மனித நேய அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்தவர்கள் பலர் தேர்வாகினர். இந்த பயிற்சி மையங்களில் படித்த 74 பேரில் 62 பேர் தேர்வாகி இருந்தனர்.
இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றச்சாட்டிற்கு உள்ளான பயிற்சி மையங்கள் ஆளும் அரசியல் கட்சியினை சார்ந்த செல்வாக்கு மிக்க நபரால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் வினாத்தாள்களை பெற்று தங்களுடைய பயிற்சி மையங்களில் படிப்பவர்கள் தேர்வுகளில் முறைகேடாக வெற்றி பெற உதவுகிறார்கள்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே இந்த வழக்கை, மாநில அரசின் கிழ் இயங்கும் விசாரணை அமைப்புகள் விசாரித்தால் உண்மை வெளியாகாது என்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.