'குரூப்1 தேர்வு' 24கேள்விகள் தவறு.. ஒப்புக்கொண்ட டிஎன்பிஎஸ்சி.. நீதிபதியை அதிரவைத்த அந்த ஒருகேள்வி
சென்னை: குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறுதான் என டிஎன்பிஎஸ்சி உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து உயர்நீதிமன்றம், இதுபோன்ற போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்ததோடு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் குரூப்1 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது.
இந்த தேர்வை ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது. இதில் சுமார் 9 ஆயிரத்து 500 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
தேர்வானவர்கள் யார்
தேர்வானவர்கள் யார் யார், பாலினம் உள்பட எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. மேலும் கட்ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை.இந்த தேர்வில் கேட்கப்பட்ட 18 கேள்விகள் தவறாக இருந்தது. எனவே முறையாக நடத்தப்படாத குரூப்1 தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும்" வலியுறுத்தி இருந்தார்.
டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறுதான் என ஒப்புக்கொண்டார். மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனறும் கோரிக்கை விடுத்தார்.
ஜுடிசியல் ஆக்டிசம்
அப்போது நீதிபதி பார்த்திபன், இதுபோன்ற போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். மேலும் குரூப் 1 தேர்வு போன்ற முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடி நடப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கண்டித்தார். ஜுடிசியல் ஆக்டிசம் என்று ஒரு கேள்வி வந்துள்ளதே அப்படி என்றால் என்ன என்று நீதிபதி கேட்டார்.
திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு
இந்த ஒரு கேள்வியே பதில்கூற முடியாத அல்லது பதிலே இல்லாத கேள்வி என்பது தெரிகிறது. இந்த மாதிரி கேள்விகள் கேட்பது ஏன் என்றும் கேட்டார். மேலும் இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், வரும் திங்கள்கிழமை டிஎன்பிஎஸ்சி விரிவான பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.