1338 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு.. அவினாசி மாணவி முதலிடம்
சென்னை: 1338 பணியிடங்களுக்கு 6 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுபாஷினி என்ற கல்லூரி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில் உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் (கிரேடு 2), நகராட்சி ஆணையர் கிரேடு 2, உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை), உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை), தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலை வாய்ப்புத்துறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி, தணிக்கை ஆய்வாளர் (இந்து சமய அறநிலையத்துறை), கைத்தறித்துறை ஆய்வாளர், உள்பட உட்பட 23 துறைகளில் காலியாக இருந்த 1338 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
குரூப் 2 தேர்வு இரு நிலை தேர்வுகளாக நடைபெற்றது. முதல் நிலை தேர்வு கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. சுமார் 6லட்சத்துக்கும அதிமானோர் எழுதிய இந்த தேர்வில், 14,797 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
இவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடந்து முடிந்தது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 2667 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள்.
நேர்முகத்தேர்வு நவம்ர் மாதம் 6ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி ( நேற்றிரவு) வரை நடத்தப்பட்டது. நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததையடுத்து நேற்று இரவே டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 2667 பேரின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுபாஷினி முதலிடம் பிடித்தார். இவர் பிஏ எகானமிக்ஸ் படித்து முடித்துள்ளதுடன் தற்போது எம்ஏ எகானமிக்ஸ் படித்து வருகிறார். சுபாஷினிக்கு ஐஏஎஸ் தேர்வில் வென்று மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்றார்.