குரூப் 4 தேர்வு நிறைவு.. சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள்.. வினாக்களுக்கான உத்தேச விடைகள் எப்போது?
சென்னை: 6491 குரூப் 4 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு இன்று நடந்தது. இந்ததேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் 2688, வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் என மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14-இல் வெளியானது.
இந்த தேர்வுக்கு ஜூலை14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.
எழுத்துத் தேர்வை எழுதுவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விதித்து இருந்தனர்.. செல்போன் மற்றும் வாட்ச், மோதிரம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பொருள் வைத்திருப்போரை தேர்வு எழுத அனுமதி கிடையாது என்றும் அவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என்றும் அறிவித்தனர் தேர்வு எழுத பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும். வண்ண எழுதுகோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர தடை விதித்தனர்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து தவறவிட்டவர்களும், இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்களும் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். எழுத்துத் தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது . 32 மாவட்டங்களில் தாலுகா வரியாக மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தது. 6491 பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கான உத்தேச விடைகள் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.