டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது.. சிபிசிஐடி அதிரடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதில் ஒருவர் இடைத்தரகர் என்பது தெரியவந்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது.
16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள். குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இதனால் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்த தொடங்கியது டிஎன்பிஎஸ்சி. அதில் முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து முறைகேடு தொடர்பாக சென்னையில் 12 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள். இதில், 3 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இடைத்தரகர் என தெரியவந்துள்ளது.