தமிழ் மொழி கேள்வித்தாளை நீக்கியதால், தமிழ்வழி மாணவர்களுக்குதான் சாதகம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 2 பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாளை நீக்கியிருப்பது கடும் சர்ச்சைக்குள்ளானது.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளில் இறுதியாக நடைபெறும் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது, ஏன் என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.
இத்தேர்வில் தமிழ்ப் பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம், தமிழே தெரியாமல் ஒருவர் தமிழக அரசுப் பணியில் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் எளிதாக நுழைய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் இதுபற்றி சென்னையில் இன்று அளித்த பேட்டி:
மொழி அறிவை எழுத்துத் தேர்வில் பரிசோதிப்பதால், முதல்நிலைத் தேர்வில் பொது தமிழ், பொது ஆங்கிலம் இருக்கத் தேவையில்லை. எப்போதெல்லாம் முதன்மை எழுத்து தேர்வு இருந்துவந்துள்ளதோ, அப்போதெல்லாம் பொதுத் தமிழ் மற்றும் பொதுத் ஆங்கிலம் ஆகியவை முதல்நிலைத் தேர்வில் இருந்ததில்லை. எனவே இந்த உத்தரவு புதிது கிடையாது.
எனவே, கிராமப்புறங்களில் படித்த மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இதனால் நன்மைதான் ஏற்படும். யாருமே பாதிக்கப்பட மாட்டார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இந்த முறையினால் நிச்சயம் நன்மைதான் ஏற்பட இருக்கிறது.
ஏனெனில், புதிய முறையினால் தமிழ் படிக்க தெரியாதவர் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். தமிழ் எழுத தெரியாதவர் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலைதான் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய முறையில் முதன்மை தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தெரிந்திருக்க முடியும். தமிழ் சுத்தமாக தெரியாத ஒரு மாணவர் கூட பொது ஆங்கிலம் பாடத்தை, எடுத்துக் கொண்டு இறுதிவரை தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், இப்போது கட்டாயம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ் தெரியாத மாணவர்கள் இறுதித் தேர்வு வரை செல்ல வாய்ப்பே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல்நிலைத் தேர்வில் 2 பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தமிழக வரலாறு, பண்பாடு, இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் திருக்குறளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படித்தவர்களும் இனி கட்டாயமாக இதை படித்து விட்டு தான் தேர்ச்சி பெற்று வர முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழ் வழி மாணவர்களுக்கு இதனால் பலன் அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.