டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட குருப் 2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் பலர் தேர்வாகினர்.
இது குறித்த சிபிசிஐடி விசாரணையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த பூர்ணிமாதேவி , வேலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற இடைதரகர் நாரயாணனுக்கு என்பவருக்கு 21 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 3 பேர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிசிஐடி தரப்பில், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு ஊழியர்களான பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.