TNPSC Scam: எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்துக்கள் மாயம்.. மேஜிக் பேனா அசோக்.. தூக்கியது போலீஸ்
சென்னை: அந்த மேஜிக் பேனாவில் எழுதினால் அரை மணி நேரத்தில் எழுத்து மாயமாகி விடுமாம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டுக்கு இந்த மேஜிக் பேனாவை தயாரித்த அசோக் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.. இதில், ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது சம்பந்தமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அந்த தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பது உறுதியானது... இதற்காக லட்சக்கணக்கான பணம் கைமாறி இருக்கிறது.. கிட்டத்தட்ட 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டிஎன்பிஎஸ்சியும் கண்டுபிடித்துவிட்டது.
குரூப் 2 ஏ
இவர்கள் யாரும் இனிமேல் வாழ்நாள் வரை தேர்வே எழுதகூடாது என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதுபோலவே குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.. இது தொடர்பாக கிட்ட தட்ட 50 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. புரோக்கர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மேலும் சிலரும் கைதாகி வருகிறார்கள்.
மேஜிக் பேனா
இதில், ஆரம்ப கட்ட விசாரணையிலேயே மேஜிக் பேனா என்ற வார்த்தை அடிபட்டது.. அதாவது, குரூப் -4 தேர்வில் அழியக்கூடிய மேஜிக் பேனாவை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தரப்பில் சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் வாக்குமூலத்தில், வேனில் விடைத்தாள்களை கொண்டு செல்லும்போதே திருத்தப்பட்டது என்றும், இந்த முறைகேட்டிற்கு உதவியாக இருந்தது மேஜிக் பேனா என்றும் வாக்குமூலத்தில் சொன்னார்.
Recommended Video
ஜெயக்குமார்
இந்நிலையில், அந்த மேஜிக் பேனாவை தயாரித்த அசோக் என்பவரைதான் தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அசோக்.. இப்படி ஒரு மேஜிக் பேனாவை எப்படி தயாரித்தார் என்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேஜிக் பேனாக்கள் கிட்டத்தட்ட 60-க்கும் மேலாக ஜெயக்குமார் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்று ஏற்கனவே செய்திகள் வந்தன.
எங்கு கிடைக்கும்?
இந்த பேனாக்களை பயன்படுத்தி எழுதினால், அதிகபட்சமாக அரைமணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் அந்த விடைத்தாளில் பயன்படுத்தப்பட்ட மை அழிந்துவிடுமாம்.. இந்த வகை பேனாக்கள் சென்னையில் பாரீஸ் கார்னரில் உள்ள கடைகளில் இருக்கும் என்றார்கள்... அதேபோல, ஆன்லைனிலும் கூட விற்பனை செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
தீவிர விசாரணை
ஆனால், சித்தாண்டி, ஜெயக்குமாருக்கு இந்த மேஜிக் பேனாக்களை அசோக் எப்படி, எப்போது தந்தார்? இதற்காக அவர் ஜெயக்குமாரிடம் எவ்வளவு பணம் பெற்றார்? முறைகேட்டிற்கு வேறு ஏதேனும் உதவி செய்துள்ளாரா? என்பது தொடர்பாக அசோக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி போலீஸ் ஆபீசில் வைத்து அசோக்கிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அநேகமாக இன்று சாயங்காலத்திற்குள் அசோக் பற்றிய விரிவான தகவல்களை போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.