அது எப்படி இப்படி ஒரு ரிசல்ட் வரும்.. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விசாரணை
சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். குரூப்2ஏ தேர்வு எழுதிய 30க்கும் மேற்பட்டோர் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளனர். குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியுள்ளது.
தேர்தல் முறைகேடு: ஒவ்வொரு நீதிபதிகள் வீடுகளுக்கே தேடி போன திமுக தரப்பு.. அவசர வழக்காக ஏற்க மறுப்பு
நேற்றைக்கு விடுமுறை நாள் என்பதால் இன்று காலை முதல் முழுமையாக இந்த பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தேர்வர்களின் நுழைவுச்சீட்டை வைத்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இது அனைத்தையும் ஆய்வு செய்தபிறகு, முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றி ஒரு முடிவுக்கு வந்து, அது பற்றி அறிவிப்பு வெளியிட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.